நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் .
நீ உடன் இருந்த நிறைய நேரங்களில் உன்னிடம் முழுதாய் உடன் இல்லாமல் போனதற்காக ...
இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போகலாம் என நீ நினைத்த போது,
இல்லை இல்லை சீக்கிரம் கிளம்பலாம் என அவசரப்படுத்தியதற்காக ...
உன் அனுமதி பெறும் முன்னே அவசரப்பட்ட
அந்தரங்க நேரங்களுக்காக ....
உன்னை ஏன் என்றே தெரியாமல் காக்க வைத்ததற்காக ...
நானே உன்னிடம் கேள்வி கேட்டு , உன் பதிலையும் நானே சொன்ன முட்டாள்தனத்துக்காக....
நான் உன்னை விரும்பியதை உன்னிடம் சொல்லாமல் நாட்களை வீனாக்கியதற்காக.....
உன் மேல் அக்கறை கொள்கிறேன் என்று உன்னை யாருக்கோ விட்டு கொடுக்க நினைத்ததற்காக .....
இன்னும் இது போல் ஒரு நூறு ...
உனக்கு இது தான் சரியென நானாக நினைத்து கொண்ட என் அத்தனை தவறுகளுக்கும்
நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் ..
நீ என்னை எப்படி மன்னிக்க வேண்டும், அல்லது எப்படி தண்டிக்க வேண்டும் என்பதை உன் முடிவுக்கு மனதார விடுகிறேன் ...
No comments:
Post a Comment