Sunday, April 12, 2015

வைரமுத்து


வைரமுத்து தேனி தந்த தமிழ்தேனீ
திரைத்தமிழ் ஒருபடி மேல் நோக்கி நகர  தமிழ்த்தாய் பெற்றெடுத்த ஏணி ..
சங்கத்தமிழ் ,
பாரதிதமிழ்
கண்ணதாசன் தமிழ்
அடுத்து வைரமுத்து தமிழ்
ஆமாம் ..
வைரமுத்து தமிழுக்கு இன்னொரு அடையாளம் ,
அவரின் தமிழ்
தமிழின் இன்னொரு அடையாளம் ...
எழுத்தின் அதே கம்பீரம் பேச்சில்
பேச்சின் அதே கம்பீரம் உருவத்தில் ..
சங்கமும் , நவீனமும் இணையும் புள்ளி வைரமுத்து.
பூ பூக்கும் ஓசையையும்
புல் விரியும் ஓசையும் கேட்க தெரிந்தவர் ..
சின்ன சின்ன ஆசை என இவர் போட்டு வைத்த பட்டியலில் இருக்கிறது வாழ்வின் சொர்க்கம் ..
கரிசல் காட்டு மொழிகளை கணினி அறைகளில்  கசியும் சங்கீதம் ஆக்கினார் .
காலம் வஞ்சித்த கிராமத்து மொழியை அரியணை  ஏற்றினார் .

இவர் வரிகள் கிராமங்களின் இரவு தாலாட்டு
நகரங்களின் பகல் இயக்கம் ..
கவிதைகளுக்கும் , திரை இசை பாடல்களுக்கும் இவர்  போட்ட பாலத்தில் தான் இன்றும் புதிய தலைமுறை கம்பீரமாய் நடக்கிறது ..
இவர் வரிகளை நயாகராவில் நாயக, நாயகிகள் பாடி ஆடினால் அமெரிக்கா எங்கும் தமிழ் மணம்  வீசும் .
கலிபோர்னியாவும் கம்பன் கழகம் ஆரம்பிக்க ஏங்கும்...
ஐஸ்வர்யாராய் ஐம்பது கிலோ தாஜ்மஹால் என்பதை கண்களாலே எடை போடும் கற்பனை வளம் தான் வைரமுத்து ..
சுஷ்மிதாசென் காதல் கொண்டு காதலன் கையில் மிதக்கும் போது , காதலில் பொருட்கள் எடையிழக்கும் என்ற உண்மை சொன்ன அறிவியல் நியூட்டன் வைரமுத்து .
ஆரியத்தையும் , திராவிடத்தையும் மொழியினால் காதல் கலவி செய்ய வைக்கும் பிரமாண்டம் தான் வைரமுத்து .
காம்போடு இருக்கும் பூ காற்றில் ஆடுவதை ஒற்றைகால்நடனம் என்பதை  வைரமுத்து கண் கொண்டால் தான் பார்க்க முடியும் .
பிரபஞ்சம் பற்றின உண்மை சொல்ல அறிவியல் தெரிய வேண்டும் என்றில்லை ,இவரின் தண்ணீர் தேசம் படித்தால் போதும் ஆயிரம் சுற்றுச்சூழல் போராளிகளை உருவாக்கும் ஆயுதம் அது .
இவர் காதல் வரிகள் எழுதினால் இளைஞனுக்குள் இன்பத்தீ பிடிக்கும் ..
இவர் சமுகம் பற்றி எழுதினால் அவனுள் புரட்சி கொடி பிடிக்கும் ,

இயற்கை மேல் இவர்போல் பேரன்பு கொண்டஆளில்லை என்பதை மரம் பற்றின இவரின் ஒற்றைவரி சொல்லும் ..
மரம் இருக்கும் வரை பூ பூக்கும் ,
இறக்கும் வரை காய் காய்க்கும்
வெட்டி நட்டால் கிளை மரமாகும்
வெட்டி நட்டால் கரம் உடலாகுமா ..
மனிதா !! மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா ! ஒவ்வொரு மரமும் போதி மரம் தான் ..


கற்பனைகளை  மட்டும்  சேர்த்தெழுதி கைதட்டல் வாங்கும் மொழி இல்லை வைரமுத்து ..
கல் நெஞ்சும் நீர் சுரக்கும் , கடும் பாறை கண்ணீர் விடும் இவர் உணர்ச்சி ஊற்றி எழுதினால் ..
அம்மா பற்றி கொஞ்சமும் வார்த்தை ஜாலம் இன்றி உண்மையாய் எழுதிய இந்த வரிகள் அது வைரமுத்துவால் மட்டும் தான் முடியும் ,
அதை எழுத வைரமுத்து ஆனால் தான் முடியும் ..!!.
வைரமுத்து பிறப்பான்னு வயித்தில் நீ சுமக்கவில்லை
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு  ..
எனக்கு ஏதும் ஆச்சுதுன்னா உனக்கு வேறு பிள்ளையுண்டு
உனக்கு ஏதும் ஆச்சுதுன்னா எனக்கு வேறு தாய் உண்டா ..
இந்த வரிகள் , அதன் உணர்ச்சிகள் ,
அதன் உண்மைகள் இது தான் வைரமுத்து ..
 ஏழை சொல் அம்பலம் ஏறுமா என்பார்கள்

ஆனால் வைரமுத்து எழுதின பின்பு கருவாச்சி - காவியம் ஆனாள் கள்ளிக்காடு - இதிகாசம் ஆனது .. 

HATS OFF வைரமுத்து ..

[வைரமுத்து அறுபதாம் பிறந்த நாளுக்காக ...]

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...